எம் தேசத்தில் நடந்தேறிய உண்மைச் சம்பவம்.
எவ்வளவுதான் ஆழமான குழியில் புதைத்திட்டாலும் உண்மை என்றோ ஒருநாள்
வெளிச்சத்திற்கு வரும் , என்பதற்கு ஏற்ப உருவானதே Dr. வரதராஜாவின் "பொய்யா விளக்கு".
இறுதிப்போரின் கொடூரங்களை மக்களோடு மக்களாக இருந்து அனுபவித்து அம்மக்களுக்காக அவர் செய்த மருத்துவப்பணியும் , எதிர் கொண்ட இன்னல்களும் உடனிருந்து பார்ப்பதுபோல் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
கண்ணாற் பார்க்க முடியாத, காதாற் கேட்கமுடியாத பல கொடூரமான சம்பவங்களைக் குறியீடாகக் காட்டிய விதம் சிறப்பாக இருந்தது. வன்முறைக்காட்சிகள் பல தவிர்க்கப்பட்டாலும் காட்சிகள் விறுவிறுப்பாக இருந்தன. வைத்தியரின் இயல்பான நடிப்பு உருக்கமாக இருந்தது. வேறுபட்ட களம் ஒன்றை உண்மைக்காட்சிக்குரிய களமாக மாற்றிய விதமும் , ஒளிப்பதிவு செய்த விதமும் சிறப்பானதே.
2009 இறுதிப் போரின் கொடூரங்களை தொலைக்காட்சிகளிலோ , பத்திரிகைகளிலோ பார்க்க முடியாமல் மூடிவைத்தவர்கள் நாங்கள். ஆனால் அக்களத்துக்குள் தன்னைப் பூரணமாக அர்ப்பணித்து பல கொடூரங்களைக் கண்டு மனம் உடைந்த வைத்தியரின் உள்ளக்குமுறலின் பாதியை ஏனும் இப் படத்தினூடே வெளிக்கொணர்ந்தது வெற்றிக்குரியது.
ஈழத்தமிழர் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம் இது என்பதை மனதிற் கொண்டு தவறவிட்டவர்கள் இங்கு பார்த்துக் கொள்ளுங்கள்.
இது இப்படி நடந்தது என்று கூறுவது இதிகாசம். கடவுள் எங்கே இருக்கின்றார்? என்று பிள்ளைகள் கேட்கும்போது, தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்று சொல்வோம். எங்கே காட்டு என்று கேட்கும்போது புராணக் கதைகளையும் , இதிகாசக்கதைகளையும் கூறி கடவுள் இருப்பதனை மெய்ப்பிக்க முயல்கின்றோம்.
கடவுள் என்பவர் யார் ? கடவுள் தேவைப்படும் போதுதான் காட்சி கொடுப்பார். எம்மைப் பொறுத்தவரை இறுதிப்போரில் உடனிருந்து ஆயிரக்கணக்கான உயிர்களைக் காத்த Dr. வரதராஜா போன்றோரே கடவுள்கள். எனவே இதை உங்கள் பிள்ளைகளுக்கு எடுத்துக் கூறுவதுடன் அவர்களுடன் கூட இருந்து இப் படத்தைக் குடும்பத்துடன் பார்த்து நாம் கடந்து வந்த பாதையை அவர்களும் பார்க்க வழி செய்யுங்கள்.